ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் கிரேன் சரிந்து விபத்துக்கு உள்ளானதில் 11 பேர் பலி..

ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் ஷிப்யார்ட் நிறுவனத்தில் கிரேன் சரிந்து விபத்துக்கு உள்ளானதில் 11 பேர் பலியானதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.


 


விசாகப்பட்டினம் காவல் துணை ஆணையர் சுரேஷ் பாபு இந்த விபத்தை உறுதி செய்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை கூறுகிறது.


 


70 டன் எடைக் கொண்ட அந்த கிரேனின் சுமையை ஊழியர்கள் பரிசோதனை செய்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது.


இந்த விபத்து தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் பலியானவர்களாக வருந்துவதாக அவர் கூறி உள்ளார்.


ஆந்திர முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விபத்து தொடர்பாக துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு விசாகாப்பட்டின ஆட்சியர், ஆணையர் மற்றும் அமைச்சர் அவந்தி ஸ்ரீனிவாஸ் ஆகியோர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


 


தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு இந்த விபத்து அதிர்ச்சி தருவதாகக் கூறி உள்ளார்.


விசாரணை குழு


இந்த விபத்து தொடர்பாக விசாரிக்க இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக விசாகாப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் விநய் சந்த் தெரிவித்துள்ளார்.


 


இந்த விபத்தில் பதினொரு பேர் பலியாகி உள்ளதாகவும், வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பலியானவர்களில் நான்கு பேர் இந்துஸ்தான் ஷிப்யார்ட் நிறுவன பணியாளர்கள் என்றும், 7 பேர் ஒப்பந்த ஊழியர்கள் என்றும் அவர் கூறி உள்ளார்