உலகின் முதல் கோவிட்-19 வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.. .

உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.


 


சீனாவில் கடந்தாண்டு இறுதியில் முதல் முதலில் கண்டறியப்பட்டதாக அறியப்படும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் தற்போது உலகம் முழுவதும் 1.28 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 5.68 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.


 


எனவே, கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு உலகம் முழுவதும் 120க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



இந்த நிலையில், ரஷ்யாவை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி அதை மனிதர்களிடத்தில் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக அறிவித்துள்ளதாக அந்த நாட்டை சேர்ந்த செய்தி முகமையான ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது.


 


இந்த தகவலை இன்ஸ்டிடியூட் ஃபார் ட்ரான்ஸ்லேஸ்னல் மெடிசன் அண்ட் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குநர் வாடிம் டாரசோவ் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது


இதுகுறித்து மேலும் பேசிய அவர், "உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை வெற்றிகரமாக மனிதர்களிடம் பரிசோதனை செய்துள்ளோம். மாஸ்கோவில் உள்ள செச்செனோவ் அரசு மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தன்னார்வலர்களைக் கொண்டு மேற்கொண்ட இந்த பரிசோதனையில் நாங்கள் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்று தெரியவந்துள்ளது. இந்த பரிசோதனையில் பங்கேற்ற முதல் குழுவினர் ஜூலை 15ஆம் தேதியும், இரண்டாவது குழுவினர் ஜூலை 20ஆம் தேதியும் வீடு திரும்புவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.


 


ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கமலே இன்ஸ்டிடியூட் ஆஃப் எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோபயாலஜியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய இந்த தடுப்பு மருந்தை மனிதர்களிடத்தில் பரிசோதிக்கும் பணியை கடந்த ஜூன் 18ஆம் தேதி செச்செனோவ் பல்கலைக்கழகம் தொடங்கியது.


 


இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள செச்செனோவ் பல்கலைக்கழகத்தின் இயக்குநர்களில் ஒருவரான அலெக்சாண்டர் லுகாசேவ், "இந்த கட்டத்தில் நாங்கள் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்து மனிதர்களுக்குப் பாதுகாப்பானதா, இல்லையா என்பதை கண்டறிவதையே நோக்கமாக கொண்டிருந்தோம். பரிசோதனையின் முடிவில் இந்த தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.