உலகெங்கும், 14 லட்சத்து, 47 ஆயிரத்து, 471 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில், மூன்று லட்சத்து, ஒன்பதாயிரத்து, 145 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வைரஸ், 83 ஆயிரத்து, 401 பேரின் உயிரைப் பறித்துள்ளது.
சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், கடும் மன வேதனையில் இருப்பதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு தொடர்ந்து, மன நல மருத்துவர்கள் மற்றும் சமூக தொண்டு நிபுணர்கள் ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.இது குறித்து, மன நல மருத்துவர்கள் கூறியுள்ளதாவது:பகல், இரவு பாராமல், டாக்டர்கள், நர்சுகள் பணியாற்றுகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு, அதிக அளவில் நோயாளிகளை பார்க்க வேண்டிய நிலையில் உள்ளனர். கண்ணுக்கு தெரியாத, வைரஸ் எதிரியை சந்திக்க வேண்டியுள்ளது. நோயாளிகளை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்புடன், அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.அதே நேரத்தில், அது தோல்வியில் முடிந்து, பலர் கொத்துக் கொத்தாக உயிரிழக்கும்போது, அவர்கள் ஊக்கத்தை இழந்து விடுகின்றனர். கண் எதிரே ஒரு உயிர் கைவிட்டு போவதை தடுக்க முடியாத ஏக்கம், அவர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தி விடுகிறது.இதைத் தவிர, குடும்பத்தாரையும் சந்திக்க முடியாமல், தனிமையில் இருக்க வேண்டியுள்ளது. இது, அவர்களுடைய மன உறுதியை குலைத்து விடுகிறது.சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் சிலருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதுவும், அவர்களை மன ரீதியில் பாதிக்கும் அம்சமாகும். இத்தாலியில் மட்டும், மருத்துவ துறையைச் சேர்ந்த, 13 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை, 90 டாக்டர்கள், 29 நர்சுகள் இறந்துள்ளனர்.அதிக நேரம் பணியாற்றுவதால் ஏற்படும் உடல் சோர்வைவிட, இந்த மன சோர்வு அவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. இந்த வைரஸ் கொடூர பாதிப்பு எப்போது முடியும் என்பது தெரியாதது, அவர்களுடைய மன உறுதியை அசைத்து பார்க்கிறது.இந்த மன உளைச்சலால், சிலர் தற்கொலை செய்துள்ள சம்பவங்களும் நடந்துள்ளன. டாக்டர்கள் மற்றும் நர்சுகளை, ஊக்குவிக்கும் வகையில், தொடர்ந்து அவர்களுக்கு மன நல ஆலோசனைகளை அளித்து வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்
கண்ணுக்கு தெரியாக, 'கொரோனா' வைரசுக்கு, தங்கள் கண் எதிரே, கொத்துக் கொத்தாக மக்கள் உயிரிழந்து வருவதால், ஐரோப்பிய நாடுகளான, இத்தாலி, ஸ்பெயினைச் சேர்ந்த டாக்டர்கள், நர்சுகள் பலர் மன உளைச்சலில் உள்ளதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இத்தாலியில் 139,422 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 17669 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் நேற்று மட்டும் 3039 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. நேற்று மட்டும் இத்தாலியில் 542 பேர் பலியானார்கள், ஸ்பெயினில் 747 பேர் பலியானார். உலகிலேயே இத்தாலியில்தான் அதிகமான நபர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளனர். ஸ்பெயின் இன்னும் சில நாட்களில் பலி எண்ணிக்கையில் இத்தாலியை முந்தும்.