காவல்துறையினர் தடியடி நடத்தியத்தைக் கண்டித்து, நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் மற்றும் ஆண்கள் வண்ணாரப்பேட்டையில் சனிக்கிழமையும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறவேண்டும் என இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் பல கட்டங்களாக நடந்த போராட்டங்களில் ஒரு பகுதியாக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் வெள்ளியன்று காவல்துறையினர் தடியடி பிரயோகம் செய்தனர்.
வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடியை எதிர்த்து தற்போது பல மாவட்டங்களில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. வண்ணாரப்பேட்டையில் கூடியுள்ள பெண்கள் பலர், தெற்கு டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களாக ஷாஹீன்பாக் பகுதியில் நடைபெறும் தொடர் போராட்டம் போலவே தாங்களும் குழந்தைகளுடன் வந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்