எனக்கு காவி சாயம் பூசப்பார்க்கிறார்கள்.. நடிகர் ரஜினிகாந்த்.

திருவள்ளுவரை போலவே எனக்கும் காவி சாயம் பூசப்பார்க்கிறார்கள், நானும் மாட்ட மாட்டேன், திருவள்ளுவரும் மாட்ட மாட்டார்" என்று கூறியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.


மேலும், தமிழகத்தில் சரியான ஆளுமைக்கு இன்றும் வெற்றிடம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த் இவ்வாறு கூறியுள்ளார்.


சமீபத்தில் பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை போடப்பட்டு திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது விமர்சன கருத்து எழுதப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த வாரம் தஞ்சாவூரில் உள்ள திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது. அடுத்ததாக, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் காவி உடை அணிவித்து, ருத்திராட்ச மாலை அணிவித்து, தீபாராதனை காட்டி வழிபட்டு கைதானார்.


திருவள்ளுவர் மீது மதசாயம் பூசப்படுவதாக தமிழகத்தின் எதிர்கட்சியினர் கடும் விமர்சனங்களை வைத்துள்ள இந்த நேரத்தில், ரஜினிகாந்திடம் பாஜகவில் இருந்து அழைப்பு வந்ததா என்றும் திருவள்ளுவர் மீது காவி சாயம் பூசப்படும் சர்ச்சை குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.


''திருவள்ளுவர் ஒரு சித்தர். அவருக்கு எந்த மதத்தின் சாயமும் பூச முடியாது. மேலும் அவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர். அவர் ஆத்திகர் என்பது திருக்குறளை படித்தாலே தெரியும். அவர் ஆத்திகர். நாத்திகர் அல்ல அதனை யாரும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. பாஜகவினர் தங்களது விருப்பத்திற்கு செய்யும் விஷயங்களை பொதுவாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் காவி உடை போட்டதற்காக ஊரில் உள்ள எல்லா திருவள்ளுவர் சிலைகளுக்கும் அதுபோல செய்யவேண்டும் என அவர்கள் சொல்லவில்லை,'' என்று கூறினார்.பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் ரஜினி பாஜகவில் சேரவேண்டும் என தொடர்ந்து பேசிவருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ''யாரும் அழைப்பு விடவில்லை. யாரும் என்னிடம் பாஜகவில் சேரவேண்டும் என கேட்கவில்லை,'' என்றார்.திருவள்ளுவருக்கு சாயம் பூச நினைப்பது போல, எனக்கும் காவி சாயம் பூசப்பார்க்கிறார்கள். இருவரும் தப்பித்துவிடுவோம் என்று ரஜினிகாந்த் கூறினார்.தப்பித்தால் சரி